-->

தாய்ப்பாலின் மகத்துவம் அறிவோம்!

 தாய்ப்பால்!
இயற்கை அளித்த அருட்கொடை அது. உலகத்தில் மிகச் சிறந்தது தாய்ப்பாலே. தாய்ப்பாலின் மகத்துவம் நாம் அறிந்ததே. இருந்த போதிலும் தாய்ப்பாலைப் பற்றிய நமது சந்தேகங்களும் அதிகமே. தாய்ப்பால் எப்போதிருந்து கொடுக்க வேண்டும், தாய்ப்பாலைக் கொடுப்பதற்கு முன்பு நாம் என்னென்ன செய்ய வேண்டும், பொதுவாக தாய்ப்பால் கொடுப்பதில் நமது பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன போன்றவைகளைப் பற்றி அறிவியல் பூர்வமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இதன் பொருட்டு நமது சந்தேகங்களை  
குழந்தை நல நிபுணர்
டாக்டர்,திருமதி. அம்பிகா ஸ்ரீ காந்த் M.B.,B.S., D.C.H., அவர்கள் முன் வைத்தோம்.

டாக்டர் .திருமதி. அம்பிகா ஸ்ரீ காந்த் M.B.,B.S., D.C.H.,
அம்பிகா ஸ்ரீகாந்த்



 டாக்டர் .திருமதி. அம்பிகா ஸ்ரீ காந்த் M.B.,B.S., D.C.H.,
அவர்கள் தமது M.B.,B.S., படிப்பை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்றவர். குழந்தை நலனுக்கான பட்டய மேற்படிப்பை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்தவர். கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக குழந்தை நல மருத்துவத்தில் தனது சேவையைப் புரிந்து வருகிறார். குழந்தை மருத்துவம் மற்றும் அது தொடர்பான துறைகளில் ஆகப் பெரிய திட்டங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் தொடர்புக்கு:
ஸ்ரீ பாலா மெடிக்கல் சென்டர்,
901, திருச்சி ரோடு,
கோவை - 641 045
போன்: 0422-2316572, 2323333.
 அவரிடம் பேசியதிலிருந்து:

குழந்தை பிறந்து ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே தாய்ப்பால் அளிக்கப் பட வேண்டும்.

முக்கியமான விஷயம் என்னவெனில் தாய்ப்பால் மட்டுமே அளிக்கப் பட வேண்டும்.
வேறு எதுவும், குறிப்பாக சர்க்கரை, விளக்கெண்ணெய், பசும்பால், தேன் போன்றவைகளை தரவே கூடாது. தாய்ப்பால், தாய்ப்பால் மட்டுமே பிறந்த குழந்தைக்கு உகந்தது. சீம்பாலை ஒரு குழந்தை தவறவே விடக் கூடாது.

டாக்டர், ஏன் தாய்ப்பால் அவ்வளவு முக்கியம்?


  • தாய்ப்பால் சுத்தமானது. கலப்படமில்லாதது. கலப்படம் செய்ய முடியாதது.
  • குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக் கூடியது.
  • நோய்க் கிருமிகளை எதிர்க்கும் வல்லமை தாய்ப்பாலுக்கு மட்டுமே உள்ளது.
  • தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளை விட தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அதிக புத்திசாலிகளாகத் திகழ்வார்கள்.
  • தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று, குண்டாகும் தன்மை, அதிக மன அழுத்தம் (Hyper Tension), சர்க்கரை நோய்த் தாக்கும் அபாயம் போன்றவை குறைவாகவே உள்ளது. 
முக்கியமாக தாய்க்கும் குழந்தைக்கும் மன ரீதியான நெருக்கத்தை  ( Emotional bonding) ஏற்படுத்துகிறது.

டாக்டர், தாய்பாலைத்  தருவதற்கு ஒரு தாய் எவ்வாறு தயாராவது?

 எவ்வளவுதான் படித்திருந்தாலும், என்னதான் கம்ப்யூட்டர் எஞ்சினியராக இருந்தாலும் அவரவர் குழந்தை என்று வரும்போது எல்லாப் பெண்களுமே பதட்டமடைகிறார்கள். போதும் போதாதற்கு பார்க்கும் அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப free advice களை அள்ளி வீசிவிட்டுப் போய்விடுவார்கள். " அந்தக் காலத்திலே எங்களுக்கு எல்லாம் எவ்ளவு பிரச்சின? இப்ப அந்த மாரியா?" என்பதில் ஆரம்பித்து ," இப்படித்தான் என் அக்காவோட மச்சினன் பொண்ணு  பால் கொடுக்கும் போது பொரையேரி ..." என்று நம் வயிற்றில் புளியைக் கரைப்பார்கள். ஆனால் நாம் பயப்படத் தேவையில்லை. குழந்தைக்குப் பாலூட்டுதல் என்பது இயல்பான செயல்.
உண்மையில் ஒரு பெண் கர்ப்பமாய் இருக்கும்போதே, மகப்பேறு மருத்துவரிடம் தனது மார்பகத்தை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்புக் காம்புகளில் வெடிப்புகள் உள்ளனவா அல்லது மார்புக் காம்புகள் உள் அழுந்தி உள்ளனவா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஆர்வம் மற்றும் தன்னம்பிக்கை:  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இவை இரண்டும் அவசியம். ஆர்வத்தோடும் தன்னம்பிக்கையோடும் உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். மார்பக அளவிற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும்  எந்தவித சம்பந்தமும் இல்லை.

தாய்ப்பால் சுரப்பதற்கு முக்கிய தூண்டுதலே குழந்தை முட்டி முட்டிப் பால் குடிப்பதுதான். எனவே குழந்தையின் வாயை மார்புக் காம்பில் வைத்து நன்றாக உறிஞ்ச விடுங்கள். குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு பால் விரும்புகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பால் சுரக்கும். உங்களிடம் உள்ள பாலை முழுவதும் கடைசிச் சொட்டு வரை கொடுங்கள். இது மீண்டும் பால் ஊறுவதற்கு மிக முக்கிய தூண்டுதலாய் இருக்கும்.
பால் ஊறுவதற்க்கும், பாலை வெளியேற்றுவதற்கும் நமது உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. எனவே மனதை தைரியமாகவும் ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மனதளவில் உங்கள் குழந்தையை நினைக்கும் போதே பால் ஊறி விடும்.

பால் கொடுக்கும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் எந்தவிதப் பிரச்சினைகளும்
ஏற்படாது.
சத்துள்ள, ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டும். எந்த விதமான உணவுக் கட்டுப்பாடும் தேவையில்லை.

பால் ஊறுவதற்கென்று விசேஷமான இயற்கை உணவு அல்லது செயற்கை உணவு எதுவும் இல்லை. ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொள்ளுவதன் மூலம் பால் அதிகமாக ஊறும் என்பதற்கான எந்த வித மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை.

பாட்டில் பாலுக்கும் தாய்ப்பாலுக்கும்?


பாட்டில் பாலையும் தாய்ப்பாலையும்  நீங்கள் ஒப்பிடவே  ஒப்பிடாதீர்கள். இது வேறு அது வேறு. உண்மையில் என்ன நடக்கின்றதென்றால், மிக ஆரம்ப நிலையில் பால் புட்டியில் பால் புகட்டும் போது, குழந்தைக்கு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. எது தாயின் மார்புக் காம்பு எது பாட்டில் நிப்பிள் என்று அது திணறுகிறது. ஆனால், அது பாட்டில் நிப்பிளையே  விரும்புகிறது. ஏனெனில், தாயின் மார்பிலிருந்து அது உறிஞ்ச வேண்டும். அதற்கு அது அதிக சக்தியை பிரயோகிக்க வேண்டும். ஆனால், பாட்டிலில் அது உறிஞ்சத் தேவையில்லை. எனவே, பாட்டில் பாலைத் தவிர்த்து குழந்தையை தாய்ப்பால் பருக பழக்குங்கள். 
கவனியுங்கள், பாட்டில் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, காது சம்பந்தமான நோய்கள், மூச்சு சம்பந்தமான நோய்கள் போன்றவை ஏற்படலாம். ஜாக்கிரதை.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் எவ்வளவு கொடுக்க வேண்டும்?


தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  அதைப் போலவே நமது பெண்களுக்கு, குழந்தை நிறைய முறை ஒன்  பாத்ரூம் போகிறது அல்லது அதிக முறை டூ பாத்ரூம் போகிறது அல்லது டூ பாத்ரூமே போகமாட்டேங்கிறது என்ற சந்தேகமும் இருக்கிறது.  குழந்தை சுறுசுறுப்பாகவும் நன்றாக பால் குடிக்கும் வரையிலும் நாம் இதைப் பற்றிக் கவலைப் படத்தேவையில்லை.

குழந்தைக்குப் போதுமான அளவு பால் இருக்கின்றதா இல்லையா என்பதை எப்படி அறிவது?

  • குழந்தை சீரான அளவில், தேவையான அளவிற்கு எடை கூடுகிறதா என்பதைக் கவனியுங்கள்.
  • ஒரு நாளைக்கு 6 முதல் 8 தடவை ஒன்  பாத்ரூம் போகிறதா என்பதைக் கவனியுங்கள்.
  • ஒரு மார்பில் பால் அருந்தும் போது  மற்றொரு மார்பில் பால் வழிகிறதா என்பதைக் கவனியுங்கள்.
இவைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு போதுமான அளவிற்கு பால் கிடைக்கிறது என்று பொருள். இதைத் தவிர்த்து குழந்தை இரவில் தூங்காமல தவித்தாலோ அல்லது அழுது கொண்டே இருந்தாலோ பால் போதவில்லை என்று அர்த்தமில்லை. நமது குழந்தை இந்த உலகத்தோடு பழக மூன்று நான்கு மாதங்கள் ஆகும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு முறை பால் கொடுக்க வேண்டும்?

 இதற்கெல்லாம் கணக்கு எதுவும் இல்லை. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுங்கள். ஆனால் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்காவது பால் கொடுங்கள். முதல் 4 மாதத்திலிருந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுங்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு வேண்டுமானால் கஞ்சி, கூழ் போன்ற திட திரவ உணவுகளை ஆரம்பிக்கலாம்.

பாலூட்டும் போது பொதுவாக ஏற்படும் பிரச்சினைகள்?

    - மார்புக் காம்புகளில் புண் இருத்தல். (Sore Nipple) - அடிக்கடி  சோப் மற்றும் தண்ணீர் விட்டுக் கழுவாதீர்கள். மார்பகத்தை உலர்வாகவும் சுத்தமாகவும் வைத்திருங்கள்.
     - பால் கட்டிக் கொள்ளுதல்.  குழந்தைக்கு அடிக்கடி பாலூட்டுங்கள். சூடான ஒத்தடம் கொடுங்கள்.
     - பால் கதக்குதல் . சில சமயங்களில் இது இயல்பே. குழந்தைக்கு எடை கூடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லாத வரை நீங்கள் கவலைப் படத் தேவையில்லை. குழந்தையைத் தோளில் சாய்த்துக் கொள்ளுங்கள். இது வாயுவை வெளியேற்ற உதவும்.
-->





1 கருத்து: