சனி, டிசம்பர் 27, 2014



செவித்திறன் இழப்பு (HEARING LOSS)

காதுல கொஞ்சம் (விஷயம்) போட்டுக்குங்க!
செவித்திறனைப் பாதுகாத்திடுங்க!!
டாக்டர் சொல்றதக் கேளுங்க!!!
நமக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளதா அன்றி இல்லையா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? கீழ்க்கண்ட கேள்விகளில் 3 கேள்விகளுக்கு ஆம் என்று சொன்னால் நீங்கள் உடனடியாக காது மூக்கு தொண்டை நிபுணரை கலந்தாலோசிப்பது நலம். 5 கேள்விகளுக்கு மேல் என்றால் நீங்கள் கட்டாயம் காது மூக்குத் தொண்டை மருத்துவரை அணுகியே ஆக வேண்டும்.
1. டெலிபோனில் பேசும்போது தெளிவாய்க் கேட்கிறதா?
2.சத்தமான சூழ்நிலையில் கேட்பதில் உங்களுக்குச் சிரமமாய் இருக்கிறதா?
3. இரண்டு மூன்று பேர் பேசும்போது புரிந்து கொள்வதில் சிரமப்படுகிறீர்களா?
4. மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளச் சிரமப்படுகிறீர்களா?
5.மற்றவர்கள் உங்களிடம் பேசும்போது அவர்கள் முணுமுணுப்பதாகவோ அல்லது அவர்கள் தெளிவாய்ப் பேசவில்லை என்றோ உணர்கிறீர்களா?
6. மற்றவர்கள் பேசுவதைத் தவறாகப் புரிந்து கொள்கிறீர்களா அல்லது சம்பந்தமில்லாமல் பதிலளிக்கிறீர்களா?
7.மற்றவர்கள் உங்களிடம் பேசும்போது திரும்பக் கூறும்படி அடிக்கடி கேட்கிறீர்களா?
8.பெண்களும், குழந்தைகளும் பேசும்போது உங்களால் தெளிவாய் புரிந்து கொள்ள முடிகிறதா?
9. நீங்கள் TV வால்யூமை அதிகமாய் வைக்கிறீர்கள் என்று மற்றவர்கள், குறிப்பாக உங்கள் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்களா?
10. தங்களுக்கு அடிக்கடி மணியடிப்பது போலவோ, உறுமும் சப்தமோ, கிளிக்,கிளிக் என்ற சத்தமோ உஸ்ஸ் என்ற சத்தமோ இரைச்சலான சத்த்மோ கேட்கிறதா?
11. சில சத்தங்கள் பலமாய்க் கேட்கிறதா?

hearing_lossசெவித்திறன் இழப்பு (HEARING LOSS) என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடாகும். இதற்கு நமது சூழல், நமது வாழ்க்கை முறை, பரம்பரைக் காரணங்கள், நெருங்கிய உறவில் திருமணம் செய்வது போன்றவை காரணமாகின்றன. பிறவிக் குறைபாடுகளில் இது முதலிடம் வகிக்கிறது. சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்றவைகளைவிட இது 3 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி உலகம் முழுக்க 25 லிருந்து 30 கோடிப் பேர் ஏதாவது ஒரு வகையில் காது சம்பந்தமான நோயினால் அவதிப்படுகிறார்கள்.
நமது நாட்டைப் பொறுத்தவரை, சரியான புள்ளி விவரங்கள் இல்லாத நிலையிலும், குறைந்த பட்சம் 8 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 12 ல் ஒரு இந்தியர் செவித்திறன் இழப்பினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். குழந்தைகளைப் பொறுத்த வரையில் நமது நாட்டில் இது சற்றே ” சீரியசான மேட்டர்”. ஏனெனில், கடந்த 2000ல் 1000 குழந்தைகளுக்கு ஒருவர் என்றிருந்த நிலை மாறி தற்போது 1000 குழந்தைகளுக்கு 6 பேர் என்றளவில் உயர்ந்துள்ளது.
ஆனால், காது சம்பந்தமான நோய்களைப் பற்றி நாம் அவ்வளவாக கவனத்தில் கொள்வதில்லை. காது சம்பந்தமான நோய் என்றால் நம்மில் பெரும்பாலோனர் ” செவிட்டுத் தன்மை” (COMPLETE DEAF) என்பதாகப் பொருள் கொள்கிறோம். காது கேட்பதில் குறைபாடு என்பதற்கும், செவிட்டுத் தன்மை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. காது கேட்பதில் குறைபாடு என்பது மிதமான குறைபாடு (MILD) என்பதிலிருந்து, தீவிரமான குறைபாடு (SEVERE) என்பது வரை பல்வேறு நிலைகளைக் கொண்டது. பல்வேறு சிகிச்சை முறைகள் மூலமும், காது கேட்புக் கருவிகள் மூலமும் இதை சரிசெய்ய முடியும் அல்லது காது கேட்கும் திறனை ஓரளவு மேம்படுத்த முடியும். ஆனால், செவிட்டுத்தன்மை என்பது முழுவதும் காது கேட்காத நிலையைக் குறிப்பதாகும்.
காது கேளாமை அல்லது குறைவாகக் காது கேட்பது என்பது சமூக ரீதியில் நாம் இயங்குவதைத் தடை செய்கிறது. காது கேளாத ஒரு நபருடன் நாம் ஏற்படுத்தும் உரையாடல் நமக்கு எரிச்சலைக் கூட ஏற்படுத்தலாம். அவரின் நிலையில் நம்மை வைத்துப் பாருங்கள்: அதன் தீவிரம் புரியும்.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், ஒரு முறை நமது காது கேட்கும் திறன் போய்விட்டால் பிறகு போனது போனதுதான் நம்மால் அதை மீட்கவே முடியாது.

எனவே, இது சம்பந்தமாக மேலும் தெளிவு பெற காது, மூக்குத் தொண்டை நிபுணர் டாக்டர்.
K. பாலகிருஷ்ணன் M.B.,B.S., MS(ENT), DNB, FRCS (Glasgow), FRCS (ORL-HNS)அவர்களிடம் காது சம்பந்தமான கேள்விகளைத் தொடுத்தோம்.
DRடாக்டர். K. பாலகிருஷ்ணன் அவர்கள் தமது MBBS கல்வியை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். காது மூக்குத் தொண்டைக்கான பட்ட மேற்படிப்பை (MS) பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். மேலும், காது மூக்குத் தொண்டைப் பிரிவில் “டெல்லி நேஷனல் போர்ட் ஆஃப் எக்ஸாம்” கல்வி நிறுவனத்தின் பட்டயமும் பெற்றவர். தவிரவும், ” ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் (Glasgow) ” என்ற உலகப் புகழ் பெற்ற மருத்துவ நிறுவனத்தின் மூத்த உறுப்பினர் (FELLOW MEMBER) என்ற அந்தஸ்தையும் பெற்றவர். காது மூக்குத் தொண்டைப் பிரிவில் சிறப்புத் தகுதியாக FRCS(ORL-HNS) பட்டயமும் பெற்றவர். 15 வருடங்களுக்கும் மேலாக லண்டன் மாநகரில் பணியாற்றியவர். காது மூக்குத் தொண்டை பிரிவில் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவமும் ஆழ்ந்த அறிவும் பெற்றவர்.
மேலும்
தொடர்புக்கு,
Dr.K.Balakrishnan
M.B.,B.S., MS(ENT), DNB, FRCS (Glasgow), FRCS (ORL-HNS)
Consultant ENT, Head & Neck Surgeon
Global Hospital
Ram Nagar
Coimbatore – 641 009
Phone Number : +91  8098 948 588
Email-Id: dr.kbalakrishnan.ent@gmail.com

அவரிடம் பேசியதிலிருந்து:
டாக்டர், செவித்திறன் இழப்பு (HEARING LOSS) என்பது அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய விஷயமா என்ன?
hearing_boardஉண்மையில் காது மற்றும் காது சம்பந்தமான நோய்கள், காது சம்பந்தமாக நாம் செய்ய வேண்டிய பரிசோதனைகள் போன்றவற்றில் நாம் அக்கறை செலுத்துவதிலலை. நமது காது மிகவும் நுண்ணிய முறையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. காது மிகவும் ” சென்சிடிவ்வான” உறுப்பு.. காதிற்குள் கண்டதையும் நுழைத்தல், சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஹேர்பின், பின்னூசி, தீக்குச்சி போன்ற பொருட்களை வைத்துக் குடைவது என்று நாம் நம் காதைப் பாடாய் படுத்துகிறோம். போதும் போதாததிற்கு கடையில் விற்கும் கண்ட கண்ட சொட்டு மருந்துகளை காதில் வேறு ஊற்றுகிறோம். இது முழுக்க முழுக்க ஆபத்தான செயல்.
நமது காதுகள் கேட்கும் வேலையை மட்டும் செய்வதில்லை. நமது உடலை சம நிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது. தலை சுற்றல் என்றால் நாம் பயந்து கொண்டு இரத்த அழுத்தம், இதய பரிசோதனை போன்றவைகளை செய்கிறோம். ஆனால், உண்மையில் தலை சுற்றல் ஏற்படுவதற்கு 80 சதவிகிதம் காதில் பிரச்சினையே.
குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை என்றால் அவர்களது பேச்சுத்திறன் பாதிக்கும். இது நாளடைவில் பேச்சுத்திறன் இழக்கும் நிலைக்கே கூட இட்டுச் செல்லும்.
டாக்டர், குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை என்பதை எவ்வாறு அறிவது? அதற்கு ஏதாவது பரிசோதனை முறைகள் உள்ளதா? அது என்ன, அவ்வளவு முக்கியமானதா என்ன?
earகாதைப் பற்றி நாம் சரிவர அக்கறை கொள்வதில்லை என்பதற்கு இந்தக் கேள்வி ஓர் உதாரணம்.
பிறவிக் குறைபாடுகளில் காது கேளாமை அல்லது செவித்திறன் பாதிப்பு முதலிடம் வகிக்கிறது. மற்ற பிறவிக் குறைபாடுகளுக்கும், பிறவியிலேயே காது சம்பந்தமான குறைபாடுகளுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. மற்ற பிறவிக் குறைபாடுகள் வெளிப்படையாய்த் தெரிபவை. எனவே, நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால், காதுக் குறைபாடுகள் வெளியில் தெரிவதில்லை. நாமும் அதைப் பற்றி அவ்வளவாகக் கவனத்தில் கொள்வதில்லை. “எங்க பரம்பரையிலேயே இப்படித்தான். நான் நாலு வயசு வரைக்குங்கூட இப்படித்தான் இருந்தேன்” என்று எளிதாய் கூறிவிடுவார்கள். போதும் போதாததிற்கு ” காதில் அழுக்கு அடைச்சிருக்கும். கொஞ்சம் எண்ணெய் விட்டால் சரியாய்ப் போய்விடும்” என்று கண்ட கண்ட எண்ணெய்களையும் காதில் ஊற்றி விடுவார்கள்.
நம்முடைய அலட்சியத்தினாலும், பொறுப்பற்ற தன்மையினாலும், அறியாமையினாலும் பெறுதற்கரிய செவிச் செல்வத்தை இழக்க வேண்டாம்.கவனியுங்கள். இது ஒரு குழந்தையின் வாழ்நாள் பிரச்சனை.

குழந்தைகளுக்கு காது கேட்பதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை நாமாகவே முடிவு செய்யக் கூடாது. நீங்கள் நடந்து போகும் போது குழந்தை தலையைத் திருப்பலாம். அல்லது நீங்கள் கை சொடுக்கும் போதோ, கை தட்டும் போதோ கூட அது சத்தம் வந்த திசையைப் பார்க்கலாம். அதை வைத்து காது நன்றாகக் கேட்கிறது என்று நாம் முடிவு செய்யக்கூடாது. வெறும் அசைவுகளை கண்ணால் பார்த்துக் கூட தலையைத் திருப்பலாம். எனவே, காது சம்பந்தமான பரிசோதனையை ஒரு காது மூக்குத் தொண்டை நிபுணர்தான் சரியாக மேற்கொள்ள முடியும். தற்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் அதற்கான பரிசோதனையைக் கட்டாயமாகச் செய்கிறார்கள். அவ்வாறு பரிசோதனை செய்யாத நிலையில் நாம் செய்து கொள்வது நல்லது. மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்குமே காது பரிசோதனைக் கட்டாயமாகும்.
இந்தப் பரிசோதனையை குழந்தை பிறந்த எவ்வளவு நாட்களுக்குள் செய்ய வேண்டும்?
child_prevent_from_hearing_lossஎவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்து விடுங்கள். இது ஒன்றும் அவ்வளவு கடுமையான பரிசோதனை அல்ல. குழந்தையின் காது கேட்கும் திறன் சரியாக இருக்கும் பட்சத்தில் பத்து நிமிடங்களிலேயே முடிந்து விடும். பிரச்சினையின் தீவிரத்தைப் பொறுத்து அதிகபட்சமாய் ஒரே நாளில் பரிசோதனை முடிந்து விடும்.
குழந்தைகளுக்கு காது கேட்புப் பரிசோதனை பேச்சு வருவதற்கு முன்பு, பேச்சு வருவதற்கு பின்பு என இரு வகைப் படும். பிறவியிலேயே ஏதாவது குறைபாடு இருந்தால் பேச்சுத்திறன் பாதிக்கக்கூடும். எனவே, சீக்கிரமே காது கேட்புப் பரிசோதனையை செய்து விடுங்கள்.
டாக்டர், பரிசோதனை முடிவிற்குப் பிறகு ஏதாவது பிரச்சினை என்றால், அதற்கான குணப்படுத்தும் முறைகள் என்னென்ன?
parisothanaiகாது கேட்புத் திறன் என்பது பல்வேறு நிலைகளைக் கொண்டது. மிகவும் மிதமான நிலையில் இருந்து (MILD) மிகக் கடுமையான நிலைவரை (SEVERE) என்று பல்வேறு நிலைகள் உள்ளன. மிகவும் ஆரம்ப நிலையில் (MILD) மருந்துகளின் மூலமே குணப்படுத்தி விடலாம். மிதமான குறைபாடு( MODERATE) எனில் “ஹியரிங் எய்டு” போன்ற கருவிகள் மூலம் சரி செய்யலாம். ஆனால், மிகவும் கடுமையான நிலை (SEVERE) எனில், “காக்ளியர் இம்ப்ளான்ட்” ஒன்றுதான் வழி. இதற்கு 8 லட்ச ரூபாயிலிருந்து 10 லட்ச ரூபாய் வரை செலவாகும். கவலைப் படாதீர்கள். குழந்தைகளுக்க்கான “காக்ளியர் இம்ப்ளான்ட்” சிகிச்சைக்கான செலவை நமது தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செலுத்தி விடுகிறது.
டாக்டர், குழந்தைகளுக்கான செவித்திறன் இழப்பு பற்றிக் கூறினீர்கள். பெரியவர்களுக்கு செவித்திறன் பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
 say_againசெவித்திறன் இழப்பு (HEARING LOSS) என்பது 3 வழிகளில் ஏற்படலாம்.
1.நமது காது, சத்தங்களை சரிவர கிரகிக்கமுடியாததால் ஏற்படும் குறைபாடு. இதை நாங்கள் Conductive Hearing Loss என்கிறோம்.
2. உட்புறக் காது அமைப்பில் உள்ள குறைபாடுகளாலும், செவித்திறன் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் செவித்திறன் குறைபாடு ஏற்படலாம். இதை நாங்கள் SENSORI NEURAL HEARING LOSS என்கிறோம்.
3. மூன்றாவதாக, மேற்குறிப்பிட்ட இரு காரணங்களும் சேர்ந்து கூட நமது செவித்திறன் இழப்பிற்கு வழிவகுக்கும்.
I. Conductive Hearing Loss ஏற்படக் காரணங்கள்:
1. வெளிப்புறக்காது அல்லது காது குழாய் அல்லது உட்புறக்காது போன்றவற்றில் ஏற்படும் குறைபாடுகள்
2. சளி அல்லது ஜலதோசம் போன்றவற்றால் நடுக்காதில் திரவம் நிறைந்திருத்தல்
3. அலர்ஜி
4. காது தொண்டைக் குழாயில் ஏற்படும் குறைபாடுகள்
5. செவிப்பறையில் ஏற்படும் பாதிப்புகள் உதாரணமாக, செவிப்பறையில் துளை ஏற்படுதல் போன்றவை
6. சிறு கட்டிகள் போன்றவை (BENINGN TUMORS)
7. காதில் குறும்பி சேர்தல் (மெழுகு போன்ற அழுக்கு)
8. காதுக் குழாயில் ஏற்படும் தொற்று நோய்கள்
9. பென்சில், சிறு துரும்பு போன்ற வேற்றுப் பொருள் (FOREIGN BODY) போன்றவை காதில் இருத்தல்
10. நடுக்காது எலும்பு வளர்வதால் ஏற்படும் பிரச்சினைகள்
II. இரண்டாவது வகை செவித்திறன் இழப்பு  உட்புறக் காது அமைப்பில் உள்ள குறைபாடுகளாலும், செவித்திறன் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஏற்படுவது. இந்த வகையான SENSORI NEURAL HEARING LOSS ஏற்பட நமது வாழ்க்கை முறையும் ஒரு காரணமாகும். இதற்கான காரணங்கள்:
1. அதிகமான சத்தத்தில் வேலை செய்வது அல்லது அதிகமான சத்தத்தை எதிர்கொள்வது
2. தலையில் அடிபடுவதால்
3. சில குறிப்பிட்ட வைரஸ்களால்
4. நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் போது
5. பரம்பரைக் காரணங்கள்
6. வயதாவதால்
7. உட்புறக் காதில் ஏற்படும் குறைபாடுகளால்
III. மூன்றாவதாக, மேற்குறிப்பிட்ட இரு காரணங்களும் சேர்ந்து கூட நமது செவித்திறன் இழப்பிற்கு வழி வகுக்கும்.
டாக்டர், செவித்திறன் இழப்பு (HEARING LOSS) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது?
calculationஇதற்கு நாம் செய்யக்கூடியது என்பதைக் காட்டிலும் செய்யக்கூடாதது எது என்பதில்தான் அக்கறை கொள்ள வேண்டும். எனவே, செய்யக்கூடாதது எது என்பதைப் பார்ப்போம்.
1. காது மிகவும் நுண்ணிய உறுப்பு (SENSITIVE ORGAN) எனவே, டாக்டரின் அறிவுரை இல்லாமல் எதையும், குறிப்பாக சொட்டு மருந்துகள், காதினுள் ஊற்றாதீர்கள்.
2. குழந்தைகளுக்கு காதில் சீழ் வடிந்தால், டாக்டரின் அறிவுரையின் பேரிலேயே மருந்துகளைக் கொடுங்கள்.
3. காதிற்குள் தீக்குச்சி, பேனா முனை, ஊசி போன்ற கூர்மையான பொருட்களை விட்டுக் குடையாதீர்கள்
4. குழந்தைகளின் காதில் பென்சில் போன்றவை சிக்கிக் கொண்டால் நீங்களாகவே எடுக்க முயற்சிக்காதீர்கள். பொது மருத்துவரைக் காட்டிலும் காது மூக்குத் தொண்டை நிபுணரே இதற்குச் சிறந்தவர்.
5. வேறு ஏதாவது நோய்க்குச் சிகிச்சை எடுக்கும் போதுகூட அந்த சிகிச்சை முறை உங்கள் காதினைப் பாதிக்குமா என்று கேட்டுக் கொள்வது நல்லது.
6. கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் மருந்து சாப்பிடும்போதும், X-Ray, Scan எடுக்கும்போதும் அதைப் பற்றி உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
7. சத்தமான சூழ்நிலையில் வேலை செய்யும்போது காதிற்குக் கவசம் அணியுங்கள்.
8. சத்தங்களை திடீரென எதிர்கொள்ளும் போது கைகளால் காதுகளை அழுத்தமாக மூடிக் கொள்ளுங்கள்.
9. அதிக நேரம் இயர் போன்களில் பாட்டுக் கேட்பதைத் தவிருங்கள்.
டாக்டர், தற்போதைய சூழ் நிலையில் ” அதிக சத்தங்களால் காது கேட்புத் திறன் இழப்பு” ஏற்படுவது அதிகரித்துள்ளது. அதிகமான சத்தமான சூழ் நிலையில் இருந்தாலோ அல்லது வேலை செய்ய நேர்ந்தாலோ நமக்கு செவித்திறன் இழப்பு ஏற்படுமா? நாளடைவில் அந்த சத்தம் நமக்குப் பழகி விடாதா?
decible001கண்டிப்பாக அந்த சத்தம் பழகி விடும். ஆனால், செவிக்கு அந்த சத்தம் மிகுந்த அழுத்தத்தை (Stress)ஏற்படுத்தும். சத்தத்தின் அளவை அல்லது ஒலியின் அளவை நாம் டெஸிபலில் (Decibel) அளக்கிறோம். நாம் இரவில் அமைதியாகத் தூங்க 35 டெஸிபல் அளவு இருக்க வேண்டும். சராசரியாக நமது அறையில் சத்த அளவு 45 டெஸிபல் அளவில் இருக்கும். வாஷிங் மெஷின் சத்தம், சாதாரணமாக ஒருவர் நம்மிடம் பேசும்போது வெளிப்படும் சத்தம் போன்றவை 75 டெஸிபலைத் தாண்டாது. இந்த அளவில் நாம் 24 மணி நேரம் இருந்தால் கூட நமது கேட்கும் திறன் பாதிக்காது.
ஆனால் இதற்கு மேல் போகும்போது நாம் எவ்வளவு நேரம் அந்த சத்தத்தை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நமது செவித்திறன் பாதிக்கக்கூடும்.
உதாரணமாக நகரின் பிஸியான நேரத்தில் ஒலி அளவு 85 டெஸிபலாக இருக்கும். இந்தச் சூழ் நிலையில் 8 மணி நேரம் நாம் தொடர்ச்சியாக அந்த சத்தங்களை எதிர்கொள்ள நேர்ந்தால் நமது செவித்திறன் பாதிக்கக் கூடும். எனவே, சத்தமான சூழ் நிலையில் வேலை செய்ய நேர்ந்தால் கண்டிப்பாக காதிற்கு கவசம் அணிய வேண்டும்.
டாக்டர், காதினைப் பராமரிக்க அல்லது செவித்திறனைப் பாதுகாக்க நீங்கள் கூறும் பொதுவான அறிவுரைகள் என்னென்ன?
prevent_hear_lossசெவித்திறன் நமக்கு இயற்கை அளித்த கொடை. நமது அறியாமையினாலும், தவறான நம்பிக்கையினாலும், அலட்சியத்தினாலும் அத்திறனை இழக்க வேண்டாம். முக்கியமாக காதிற்குள் எதையும் நுழைக்க வேண்டாம். காதைச் சுத்தம் செய்கிறேன் என்று பட்ஸால் காதைக் குடைய வேண்டாம். உங்களது சுண்டு விரல் காதினுள் நுழையும் அளவிற்கு மெல்லிய துணியால் துடைத்து எடுங்கள். காது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. கண்ட கண்ட எண்ணெய்கள், மருந்துகள் ஊற்ற வேண்டாம்.
காது கேட்கும் திறன் ஒரு முறை போய்விட்டால் போனது போனதுதான். அதை உங்களால் மீட்டெடுக்கவே முடியாது.

0 comments:

கருத்துரையிடுக